Sunday, April 03, 2011

வையம்பட்டி ஐயாவின் சிந்தனையில் ஒன்று

This is a verse written, tuned and sung by Vaiyampatti Muthusamy Aiya during Nellivasal Cuckoo Children's Camp. Enjoy!!!

கத்திரிக்காயிக்கு குடைபிடிக்க
கத்து கொடுத்தது யாரு - அந்த
கடலைக் கொட்டைக்கு முத்துச்சிப்பி போல
மூடி வச்சது யாரு
பூசணித்தலையில் பூவை அழகாய்
முடிஞ்சு வச்சது யாரு
வாசனை இல்லாக்காகிதப்பூவுக்கு
வர்ணம் அடிச்சது யாரு - யாரு யாரு யாரு
காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு

 பருத்திச்செடிக்கு பஞ்சு மிட்டாய
தின்னக் கொடுத்தது யாரு - அந்த
பனை ஒலைக்குள்ள நிறைச்சுக் காத்த
மறைச்சு வச்சது யாரு
ஆல மரத்துக்கு அத்தனை ஊஞ்சல
ஆடக் கொடுத்தது யாரு
ஆத்தில் நனையாத மல்லிகைபூவுக்கு
அத்தனை வெண்மை ஏது ஏது ஏது
காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு

 சுண்டக்கடலையின் கொண்டவனப்பு
கண்ணைப்பறிக்குது பாரு - அந்த
வெண்டைச்செடியும் விரலை நீட்டி
கேள்வி கேக்குதா பாரு
மாங்கனிக்கு மணிமூக்கு வச்சு
மயக்க வச்சது யாரு
மட்டைக்குள் இருக்கும் தேங்காய்க்கு
கண்ணை ஒட்டவச்சது யாரு - யாரு யாரு யாரு
காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு

சூரியனையும் திரும்பிப் பாக்கும்
சூரிய காந்தியப் பாரு - அந்த
தொட்டாச்சிணுங்கி பட்டுன்னு மூடிக்க
கட்டளை போட்டது யாரு
தாமரத்தண்டுக்கு நீந்தத்தெரியாது
தண்ணியில் நிக்குது பாரு
தாவி மரத்துல ஏறும் கொடிக்கு
காலு இருக்குதா பாரு பாரு பாரு
காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு

சொலவடையச் சொல்லிப்புட்டேன்
பதில் தெரிஞ்சாச் சொல்லு - அந்த
சூட்சமம் உனக்கு புரியா விட்டா
சொல்லுரதையாச்சும் கேளு
இயற்கை அன்னை படைப்பினிலே
கிடைப்பதெல்லாம் அழகு
இடையில் வந்த மனிதனாலே
விளையுது ரொம்ப அழிவு
அழிவிலிருந்து ஆக்கம் காண்போம்
அன்பு கொண்டு பழகு
தெளிவுடைய சிந்தனையால்
வாழும் இந்த உலகு

பி.கு:- மெய்ப்பு பார்த்து உதவி செய்த எனது நண்பர், கண்ணன் பெருமாள் அவர்களுக்கு எனது நன்றி.

1 comment:

Unknown said...

i think these kind of songs getting recorded for the first time now!..good effort thiagu... have u read the 1st std samacheer kalvi (uniform system of education) book...it has got many initiatives like this...